மதுரை: தமிழகத்தில் தரமான பாரம்பரிய உணவுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தி அதேவேளையில் சுகாதாரத்தைப் பேணும் வகையில், 15 இடங்களில் 'சுத்தமான தெரு உணவு மையங்கள்' அமைக்கப்படுகின்றன. அந்த மையங்களில் அந்த அந்த வட்டாரத்தில் பிரபலமான பாரம்பரிய உணவுகள் அதிகம் கிடைக்கும்.
அதோடு மட்டுமின்றி, தமிழக பாரம்பரிய உணவுகள் ஒரே இடத்தில் கிடைப்பதையும் அந்த மையங்கள் உறுதிப்படுத்தும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் சார்பில், ஒரு குறிப்பிட்ட சாலை அல்லது தெரு தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள ஹோட்டல்கள், உணவுப் பொருள் அங்காடி, பழக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, அந்த ஊரின் உணவு வகைகளைச் சுகாதாரமாக தயாரித்து வழங்கும் இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இந்தத் தெரு அல்லது சாலைகளைச் 'சுத்தமான தெரு உணவு மையம்' (clean street food hub) என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பகுதி, 'சுத்தமான தெரு உணவு மையம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான தெரு உணவு மையம்' மதுரை, சேலம், ஏலகிரி, ஏற்காடு, சென்னை, கோவை, குற்றாலம், ஊட்டி உள்ளிட்ட 15 இடங்களில் அமைக்கப்படுகின்றன.
இந்த மையங்கள், சுத்தம், உடல் நலன், பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்யும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

