சென்னை: சீன அதிபரின் வருகையை ஒட்டி சென்னையிலும் மாமல்லபுரத்திலும் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் சீன அதிபர் தங்க உள்ள நட்சத்திர தங்கு விடுதி, பாதுகாப்புப் படையினரின் முழுக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 11ஆம் தேதியன்று தனி விமானத்தில் சென்னை வருகிறார் சீன அதிபர் ஜின் பிங். 2 நாள் அரசு முறைப் பயணமாக வருகை தரும் அவர், பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
சீன அதிபருடன் அதிகாரிகள் குழு ஒன்றும் வருகை தருகிறது. அவர்கள் சென்னை கிண்டி பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர தங்கு விடுதியில் தங்குகின்றனர். பின்னர் அங்கிருந்து இருமுறை மாமல்ல புரம் செல்லும் சீன அதிபர், அங்கு பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்ப்பதுடன் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்க உள்ளனர். இதையடுத்து முக்கிய பிரமுகர்களை இரு தலைவர்களும் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீன அதிபர் வரும் தனி விமானம் சென்னையில் தரையிறங்கும், புறப்பட்டுச் செல்லும் தினங்களில் சுமார் 30 நிமிடங்கள் வரை பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்படும், தரையிறங்கும் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விமானத்தில் இருந்து சீன அதிபர் நட்சத்திர தங்கு விடுதிக்குச் செல்லும் பாதையும் விடுதியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் பாதையும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விமான நிலையம், சீன அதிபர் செல்லும் சாலைகள், தங்கு விடுதி வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து சீனாவில் இருந்து வந்துள்ள உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளது. சீன அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் சென்னை வர உள்ளனர்.
அதிபரின் பயன்பாட்டுக்காக சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நவீன கார்களும் பல்வேறு பொருட்களும் தனி விமானத்தில் சென்னைக்கு வந்து சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.