சிவகங்கை: கீழடி அகழ்வாராய்ச்சியில் நாள்தோறும் தொன்மைவாய்ந்த பொருட்கள் ஏராளமாகக் கிடைத்து வரும் நிலையில், தொடர் விடுமுறையையொட்டி, அங்கு பொதுமக்கள் குவிந்தனர்.
ஆயுதபூசை, சரஸ்வதி பூசை உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து கீழடியில் வைக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த பொருட்களை பார்த்து வியந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018 வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து ஜுன் மாதம் தொடங்கப்பட்ட 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள், இம்மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகழாய்வுப் பணி தீவிரமடைந்திருக்கிறது.