ஜெயங்கொண்டம்: சாலையில் 95 வயது தாயைக் கைவிட்ட மகன் களுக்கு போலிசார் அறிவுரை கூறி அழைத்துச் செல்ல வைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் கம்பர் தெருவை சேர்ந்த மாணிக்கம்-பட்டம்மாள் (வயது 95) தம்பதிக்கு சண்முகம், வயது 62, சதாசிவம், வயது 59 ஆகிய இரு மகன்களும் சரோஜா, வயது 65, சகுந்தலா, வயது 60, ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு மாணிக்கம் இறந்துவிட்டார். பட்டம்மாள் தனது மூத்த மகன் சண்முகம் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தாயை கவனிப்பதில் சண்முகத்திற்கும் சதாசிவத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் பட்டம்மாளை வரதராஜன்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சில மாதங்கள் இருந்த பட்டம்மாள் மகன்களைப் பார்ப்பதற்காக தள்ளாத வயதிலும் தனியாகவே செங்குந்தபுரத்தில் உள்ள மகன்கள் வீட்டிற்கு வந்தார்.
ஆனால் அவரை வீட்டிற்குள் சேர்க்க மறுத்த இரு மகன்களும் உடல் நிலை பாதிக்கப்பட்ட 95 வயதான பட்டம்மாளை வீட்டுத் திண்ணையில் ஒதுக்கிவைத்து அலைக்கழித்தனர். கடைசியில் வீட்டின் முன்பு உள்ள சாலையில் அவரை போட்டு விட்டனர்.
சாலையில் குளிரையும் கொசுக் கடியையும் தாளமுடியாமல் தவித்த அவரை அந்த வழியாக வந்த ஒருவர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அதன்பிறகும் மகன்கள் இருவரும் தனது தாயை ஏற்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேதனை அடைந்தனர்.
இதையறிந்த ஜெயங்கொண்டம் போலிஸ் அதிகாரி டிஎஸ்பி மோகன்தாஸ், பட்டம்மாளின் மகன்கள் சண்முகம், சதாசிவம் ஆகிய இருவரையும் அழைத்து, தாயை பராமரிக்காமல் தெருவில் தவிக்க விடுவது தவறு என அறிவுறுத்தினார்.
“ஒரு மாதத்திற்கு தலா 15 நாட்கள் ஒருவர் வீதம் இருவரும் பட்டம்மாளை பராமரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தாயைப் பராமரிக்க ஒருவரை நியமித்து அவருக்கு இருவரும் சம்பளம் வழங்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார். இதனை ஏற்றுக் கொண்ட மகன்கள் பட்டம்மாளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.