அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) சென்னைக்கு வரும் சீன அதிபர் ஸி ஜின்பிங், சனிக்கிழமை (அக்டோபர் 12) மாமல்லபுரத்துக்குச் செல்ல இருக்கிறார். பிரதமர் மோடியும் அதிபர் ஸியும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச இருக்கின்றனர். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர். இருவரும் நடந்து சென்றபடியே உரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் முழுவதும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு இன்று முதல் சனிக்கிழமை வரை 5 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபருடன் அந்நாட்டின் அமைச்சர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 150 பேர் வரை வருகிறார்கள். விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் போலிசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.