காரைக்குடி: அகழ்வாராய்ச் சிக்காக மத்திய அரசாங்கமே எந்த உதவியும் தராமல் கையை விரித்துவிட்ட நிலையில், அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியைச் சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் ஆகிய இரு சகோதரிகளும் தங்களது 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன் காரணமாக பலதரப்பட்ட மக்களும் சகோதரிகளைப் பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.
கீழடியில் பழந்தமிழர்கள் வாழ்ந்திருப்பது அப்பகுதி மக்க ளிடையே பெருமை தரும் விசய மாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் சகோதரிகள் தங்களுடைய 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகை யில், “அகழாய்வு செய்வதற்காக எங்களது 22 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளோம். அவற்றில் முழுமையாக ஆய்வு செய்தால் இன்னும் பொருட்கள் கிடைக்கும். பழந்தமிழர்கள் எங்கள் பகுதியில் வாழ்ந்திருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இதன் மூலம் எங்கள் ஊர் உலகத்திற்கே தெரியவந்துள்ளது,” என்றனர்.
இதேபோல் கருப்பையா என்ப வரது மனைவி சேதுராமுவும் தனது 2½ ஏக்கர் நிலத்தை இந்த அகழாய்வுப் பணிக்காகக் கொடுத்துள்ளார்.
கீழடியில் 5வது கட்ட அகழாய்வுப் பணி ஜூன் மாதம் தொடங்கியபோது அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு, செப்புப் பொருட்கள் என 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. அதேபோல் பழந்தமிழர் வாழ்க்கையை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர்த் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.