சென்னை: தமிழக மக்கள் தமக்கு வாக்களித்து முதல்வர் பதவியில் அமர்த்தினால் நேர்மையான முதல்வராகச் செயல்படுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.
இந்திய முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியபோது கமல் இவ்வாறு சொன்னார்.
“அப்துல் கலாமின் கனவுகளை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவருடன் மூன்று மணி நேரம் பேசியது என் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் கண்ட கனவை நனவாக்க, மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்,” என கமல் அழைப்பு விடுத்தார்.
அதே நேரத்தில், விவசாயம் சரியில்லை என்று வெறும் கோபத்துடன் மாணவர்கள் அரசியல் களத்திற்கு வரக்கூடாது என வலியுறுத்திய அவர், அத்தகையோர் முறையான பயிற்சி பெற்று விவசாயத்தைக் காக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தான் முதல்வரானால் நேர்மையாக இருப்பேன் என்ற அவர், யார் அந்தப் பதவிக்கு வந்தாலும் நேர்மையாகச் செயல் படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனிடையே, அடுத்த மாதம் 7ஆம் தேதி கமலின் பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட இருப்பதாகக் கூறிய திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அதனை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.