சென்னை: தோசையில் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்து, மயங்கியதும் பின் கழுத்தை நெரித்துக் கணவரைக் கொன்ற மனைவியும் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 26. இறைச்சிக் கடை நடத்தி வந்த இவருக்கு அனுசுயா, 23, என்ற மனைவியும் லோகேஷ், 4, என்ற மகனும் உள்ளனர்.
சுரேஷின் வருமானம் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்ததால் அண்மையில் மருந்துக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் அனுசுயா. அதன்பின் அவர் எந்த நேரமும் கைபேசியும் கையுமாய் இருந்தது கணவர் சுரேஷுக்குப் பிடிக்கவில்லை.
இதனிடையே, அனுசுயாவுக்கும் அவரது சகோதரி மகனான முரசொலி மாறனுக்கும் ஒரே வயது என்பதால் இருவரையும் சேர்ந்து சுரேஷ் சந்தேகப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாறனுடன் தான் பேசக்கூடாது என்று கணவர் தன்னைக் கண்டித்ததாகவும் போதையில் நாள்தோறும் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அனுசுயா போலிசிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, கணவரைக் கொல்ல முடிவுசெய்த அனுசுயா, அதற்கு மாறனின் உதவியையும் நாடினார். தான் வேலை செய்த மருந்துக்கடையில் இருந்து தூக்க மாத்திரையைப் பொடிசெய்து எடுத்து வந்த அனுசுயா, அதைத் தோசை மாவில் கலந்தார். அந்தத் தோசையை உண்ட சுரேஷ் மயக்கமடைந்ததும் மாறனை வரவழைத்த அனுசுயா, அவரிடம் தனது துப்பட்டாவைக் கொடுத்து கழுத்தை நெரித்துக் கொல்லச் செய்தார்.
அளவுக்கு அதிகமான போதையால் தூக்கத்திலேயே கணவர் உயிரிழந்துவிட்டதாக அனுசுயா அழுது ஒப்பாரி வைத்தபோதும் உடற்கூறு ஆய்வறிக்கை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது.