திண்டுக்கல்: உலக உணவு தினமான நேற்று திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் கோழி பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நண்பகலில் முதலில் வரும் 100 பேருக்கு பிரியாணிப் பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததை அறிந்து காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர். அதன் பின் 5 பைசா நாணயத்தை வாங்கி வைத்துக்கொண்டு 100 பேருக்கு பிரியாணிப் பொட்டலங்கள் வழங்கினர் கடைக்காரர்கள்.
இது குறித்து முஜிப் பிரியாணி என்னும் அந்தக் கடையின் உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் தெரிவிக்கையில், “உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
“செல்லாத நாணயத்தைக்கூட சேமித்து வைப்பது பெருமைக்குரிய விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் ஐந்து பைசா நாணயத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம்.
“ஆனால் ஏராளமானோர் செல்லாத 5 பைசா நாணயங்களை வைத்திருந்தது மிகவும் ஆச்சரியம் அளித்தது,” என்றார்.