சென்னை: சென்னை மாநகராட்சிக்கு மேயரை தேர்ந்தெடுக்க நேரடியாக வாக்களிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் திமுகவும் அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மேயர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஆளும் கட்சியான அதிமுக தரப்பிலோ யாரை சென்னை மாநகராட்சி மேயராக நிறுத்துவது என்று யோசித்து வந்த நிலையில், கூட்டணியில் உள்ள மத்தியில் ஆளும் பாஜக, ‘யோசிக்க தேவையில்லை சென்னை மாநகராட்சியை பாஜகவுக்கு ஒதுக்குங்கள்’ என்று கூறியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு யார் போட்டியிடுவார் என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில் மத்திய அமைச்சருக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய வட்டத்தில் உள்ள பிரித்வி தான் அவர் என்று தெரியவந்துள்ளது. அண்மையில் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துவிட்டு டெல்லி புறப்பட்டுச் சென்றபிரதமர் மோடியை விமான நிலையம் வரை சென்று வழி அனுப்பி வைத்துள்ளார் பிரித்வி.
அது மட்டுமில்லை, இவர்தான் தமிழக பாஜகவில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டங்களை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஒருங்கிணைத்தவர். பாஜகவின் இந்த முன்மொழிவுக்கு அதிமுக இன்னும் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றாலும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சென்னை மாநகராட்சியைப் பெறுவதில் உறுதியாக இருக்கிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை நகர மேயராக ஏற்கெனவே பதவி வகித்தவர்.