சென்னை: டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இரு வாரங்களுக்குள் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 3,400க்கும் மேற்பட்டவர்கள் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கி காய்ச்சலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், டெங்கி காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றியங்கள் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையிலும் கொசு ஒழிப்புப் பணியிலும் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பள்ளி மாணவர்களை தூய்மைத் தூதுவர்களாக நியமிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, டெங்கி காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மாவட்டத்தில் திருத்தணியில் நிஷாந்த் (11 மாத குழந்தை), தெக்கலூர் லோகேஸ்வரி, அருங்குளம் சங்கீதா, கடம்பத்தூர் மோனிசா, மத்தூர் நந்தினி ஆகிய ஐவர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகிவிட்டதால் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.