விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு பணப் பட்டுவாடா செய்து இருப்பதால் வாக்காளர்கள் ஏகமகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ரூ. 1,000 கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் அதிமுக சார்பில் அதிகாலை 3 மணி முதலே ரூ. 2,000 வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதோடு மட்டுமின்றி புடவை, வேட்டியும் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விவகாரத்தில் திமுகவை அதிமுக வீழ்த்திவிட்டது என்று கூறப்படுகிறது.
இதனால் திமுகவினர் பயப்படுவதாகவும் அதிமுகவினர் கூறுகிறார்கள். தீபாவளி நேரமாக இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் கட்சி பாராமல் கிடைத்த பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு தாங்கள் ஏற்கெனவே அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு புது உற்சாகத்தில் திளைக்கிறார்கள் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இடைத்தேர்தல் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் பல பாணிகளில் பிரசாரத்தைக் கட்டவிழ்த்து உள்ளன. நாங்கு நேரியில் திமுக இளையரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார். அதே தொகுதியில் பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், ஒரே தொகுதியில் தன்னுடன் போட்டியிட தயாரா என்று முதல்வர் பழனிசாமிக்குச் சவால் விடுத்தார்.
தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்ட திமுகவை வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் நாளான வரும் 21ஆம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குப் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.