சென்னை கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன கண்காணிப்பாளர் ஒருவர் ஜீன்ஸ் கால்சட்டை, அரைக்கால் சட்டை அணிந்த இரண்டு பெண்களை ஓட்டுநர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
சரியில்லாத உடை அணிந்திருப்பதால் தேர்வு எழுத அனுமதிக்க இயலாது என்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
பண்பார்ந்த உடையணிந்து தேர்வுக்கு வருமாறு அவர் அறிவுறுத்தியதாகவும் ஓட்டுநர் உரிமம் தேவை என்பதால் வீட்டுக்குச் சென்று சல்வார் உடையணிந்து வந்ததாகவும் அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு உடைக் கட்டுப்பாடு எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், அது குறித்து வாதிட்டதற்கு, வேறு சில சக ஊழியர்களையும் அந்த கண்காணிப்பாளர் தமக்கு ஆதரவாகத் திரட்டி தமது கருத்தை வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷ், ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது நிரம்பிய, தெளிவான மனமுடையவர்களுக்கு தகுதி உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.


