மணப்பாறை: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணி நேரம் முயன்றும் மீட்கப்பட முடியாமல் உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மரணம் குறித்து மணப்பாறை போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சுர்ஜித் உயிரிழந்தது குறித்து வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி, மணப்பாறை போலிசில் புகார் அளித்ததை அடுத்து சிறுவன் சுர்ஜித் மரணத்தைச் சந்தேக மரணம் என ஐபிசி பிரிவு 174-ன் கீழ் மணப்பாறை போலிஸ் வழக்காகப் பதிந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற விபத்துகளில் இவ்வாறு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வழக்கை முடித்துவைப்பது ஒரு நடைமுறை ஆகும்.
இந்த நடைமுறை எளிதாக முடிந்துவிடும் என்றாலும் சிறுவன் மரணம் தமிழக அரசியலிலும் இதர பல விவகாரங்களிலும் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆழ்துளை குழியில் விழுந்துவிடும் சிறுவர்களை மீட்க பின்பற்றவேண்டிய நியதிகளும் போதிய அளவுக்குத் தொழில்நுட்பமும் தமிழகத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மணப்பாறை சம்பவம் அரசியலாகும் நிலையும் தலைதூக்கி இருக்கிறது.