மணப்பாறை: திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற சிறுவனை மலைப்பாம்பு போல் விழுங்கிவிட்ட ஆழ்துளைக் கிணறு இருந்த இடம் மூடப்பட்டு அங்கு மாலை போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு
நடந்தது. அந்தக் கிணற்றில் தங்கள் மகனின் உடல் இன்னமும் இருப்பதாக நினைத்து அவனின் பெற்றோர் அங்கு வழிபடுகிறார்கள். சுஜித்தின் தந்தையான பிரிட்டோ ஆரோக்கியதாசும், 30, தாயான கலாமேரியும், 25, அந்த இடத்தில் தங்களுடைய இரண்டாவது மகனின் ஆத்மா சாந்தி அடைய வழிபாடு நடத்தினார்கள்.
பிரிட்டோ, கலாமேரி வீட்டிற்கு அருகே கவனிக்காமல் விடப்பட்டு இருந்த ஆழ்துளைக் கிணறு ஒன்றில் சென்ற மாதம் 25ஆம் தேதி மாலை சிறுவன் தற்செயலாக விழுந்துவிட்டான். அவனை மீட்பதற்காக பல நாட்கள் நடந்த பெரும் போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்துவிட்டது.
சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்தின் உடல் இன்னமும் இருப்பதாகக் கருதி பெற்றோர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கி வருகிறார்கள்.
குழந்தையின் உடலை கடைசி வரை அதிகாரிகள் காட்டாமலேயே ஏமாற்றிவிட்டனர் என்று பெற்றோர் இருவரும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
ஆழ்துளைக் கிணறு இருந்த இடத்தில் சிலுவை நட்டு நினைவாலயம் எழுப்பப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
இதனிடையே, கலாமேரி, பிரிட்டோவின் வீட்டை போலிசார் கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.