சென்னை: சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம். இந்த வெங்காயம் இன்றி சமையல் சுவைக்காது என்பதால் எப்போதுமே அதன் விற்பனை அமோகமாக நடக்கும். ஆனால் இப்போது வெங்காயத்தின் விலை மீண்டும் மும்மடங்காக உயர்ந்துள்ளதால் இதை சமையல்களில் தவிர்க்கும் நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் தொடர்மழை, விளைச்சல், வரத்து குறைவு ஆகியவற்றின் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெரிய, சிறிய வெங்காயத்தின் விலை மூன்று மடங்காக அதி கரித்துள்ளது.
இதனால் கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.90க்கும் பெரிய வெங்காயம் ரூ.80க்கும் விற்பனை ஆகிறது. சில்லரை விற்பனையில் இது இன்னும் கூடுதலாக விற்பனையாகி வருகிறது.
இதனால் சில உணவகங்களில் சாம்பாரிலும் முட்டை ஆம்லெட்டு களிலும் வெங்காயத்தைக் காண வில்லை என்று வாடிக்ைகயாளர்கள் புகார் கூறிச் செல்கின்றனர்.
வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்தன. அதன் விளைவாக இப்போது கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்து, விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறுகையில், “மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளத்தால் பயிர்கள் அழிந்தன.
அதனால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயர்ந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் இனிமேல் அறுவடை செய்யப்படும் புதிய வெங்காயம் வந்தால்தான் விலை குறையும்,” என்று கூறினர்.