திருச்சி: வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய 150 பயணிகளிடம் அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் ஒரே நாளில் 50 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை தமிழகத்துக்கு கடத்தி வந்து அதை விற்று பணம் பார்ப்பதில் வியாபாரிகள் மட்டுமின்றி பெரும்பாலான பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிலர் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவிற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்ப்பதற்கும் ஒரு பெரும் தொகையைக் கமிஷனாகப் பெற்று வருகின்றனர். இதுபோல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்டு திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த பயணிகள், வியாபாரிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை மூலம் ஒரே நாளில் 150 பேரிடம் இருந்து 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து 22 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் சோதனையில் முடுக்கிவிடப்பட்டனர்.
பயணிகளின் உடைமைகள், உள்ளாடைகள், மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கம் கடத்தி வந்திருந்தனர். கடத்தல்காரர்களின் பலவித தொழில் நுணுக்கங்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள், சூர்யா நடித்த ‘அயன்’ படக் காட்சிகளின் பாணியை நினைவூட்டும் விதமாக இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளதாகத் தெரிவித்தனர்.
சோதனைகள் வழி இதுவரை 50 கிலோ தங்கம், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய வளாகத்தின் உட்பகுதியில் துணை இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 150 பேரிடம் இந்த சோதனையானது நடைபெற்றது.
தங்கம் கடத்தி வந்த 15 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி தங்கக் கடத்தல் சம்ப வங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இச்சோதனை நடத்தப்பட்டது.
சென்னை விமான நிலையக் கழிவறைக்குள் கிடந்த 48 தங்கக் கட்டிகள்
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வந்த 5.6 கிலோ தங்கக்கட்டிகள் விமான நிலையக் கழிவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. துபாயில் இருந்து அனைத்துலக விமானமாக புறப்பட்ட விமானம் டெல்லி வந்து, பின்னர் உள்நாட்டு விமானமாக நேற்று சென்னைக்கு வந்தது.
இதில் வந்த பயணிகளையும் அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்ததில் தங்கம் எதுவும் சிக்கவில்லை.இதையடுத்து, சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்துக்குள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் 10 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது ரூ.2.24 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன.
தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், துபாயில் இருந்து இவற்றை கடத்தி வந்த வர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.