ராயபுரம்: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையின் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நிலைதடுமாறிய ஆட்டோ ஒன்று தாறுமாறாக ஓடி ஏறி இறங்கியதில் தூங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒரு பெண் இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
விபத்துக்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையின் நடைபாதையில் சிலர் வசித்து வருகிறார்கள். அவர்கள் இரவு நேரத்தில் அங்கேயே படுத்து தூங்குவது வழக்கம்.
சென்னை தண்டையார்பேட்டை வரதராஜப் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன், 60. ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று அதிகாலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மூலக்கொத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்டோ வால்டாக்ஸ் சாலை அருகே வந்தபோது, திடீரென சாலையில் சென்ற நாய் ஒன்று ஆட்டோவின் குறுக்கே பாய்ந்து ஓடியது.
இதைக் கண்ட காளியப்பன் நாய் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர நடைபாதையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி அஞ்சலி, 46, சம்பவ இடத்திலேயே இறந்தார். அத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மனைவி சித்ரா, 39, அவர்களது மகள் பவானி, 11, மகன் பரன், 13, ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த யானை கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார், பலியான அஞ்சலியின் உடலை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.