தங்கக் கடத்தல் சம்பவம் ஒன்று ‘அயன்’ திரைப்பட பாணியில் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்து விமானம் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வந்த பாத்திமா, திரேசா என்ற பெண்களின் வயிறு பெரிதாக இருந்ததால், சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். ‘ஸ்கேன்’ செய்ததில் இருவரது வயிற்றிலும் சிறிய மாத்திரை வடிவிலான தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் சுமார் இரண்டு கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ‘இனிமா’ கொடுத்து தங்கத்தை வெளியில் எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டனர் .
அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அம்புஜி என்கிற பெண் அதிகாரியும் திருப்பதி என்கிற ஆண் அதிகாரியும் ஆட்டோவில் சென்றனர். மருத்துவமனைக்கு அருகில் சென்றபோது 2 கார்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் வழி மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, பாத்திமாவையும் திரேசாவையும் கடத்திச் சென்றனர்.
அந்த காரை சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்றனர். ஆனால் கடத்தல் கும்பல் தப்பி விட்டது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதற்கிடையே கடத்தப்பட்ட இரண்டு பெண்களும் நேற்று காலை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சென்று, காரில் கடத்தியவர்கள் ‘இனிமா’ கொடுத்து தங்களது வயிற்றில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வழக்கமாக, கடத்தல்காரர்களுக்கு இனிமா கொடுத்து பொருளை மீட்க, விமானநிலைய காவல் அதிகாரிகளின் பாதுகாப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்ல வேண்டும். கடத்தல் பெண்களை சுங்க அதிகாரிகள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், சம்பவம் நடைபெற்ற தனியார் மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது, அதிகாரிகள் யாரும் தாக்கப்படவில்லை என்பதும், பெண்கள் இருவரும் சாவதானமாக கும்பலின் பின்னால் சென்று கார்களில் ஏறிப் பயணிப்பதும் பதிவாகியுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் பொய் சொன்னார்களா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் அவ்விரு பெண்களிடமும் சென்னை சுங்க அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.