.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை எடுத்தனர்.
அந்தப் பகுதியில் ஸ்டேட் வங்கியின் மூன்று ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் 200 ரூபாய் எடுத்தவர்களுக்கு 500 ரூபாய் பணம் வந்தது.
ஆனால் வங்கிக் கணக்கில் 200 ரூபாய் மட்டுமே குறைவதாக கைபேசிக்கு குறுந்தகவல் வந்தது. இன்ப அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் பணம் எடுத்ததோடு, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் அளித்தனர். அதனால் அந்த ஏடிஎம்மில் நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது.
தகவலறிந்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் நிலையத்தை மூடினார்கள். அதனால் அங்கு பணம் எடுக்க வரிசையில் நின்றவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்படும் என்று கூறப்பட்டது.
ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பியதால் இந்தக் குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.