சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று தொழிலதிபர்களுக்குத் தான் விடுத்த வேண்டுகோள் வீண்போகவில்லை என்றும் கடந்த ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ. 6,500 கோடி முதலீடுகள் குவிந்ததாகவும் முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் அறிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பும் தமிழக அரசும் இணைந்து ‘கனெக்ட் 2019’ என்ற அனைத்துலக தகவல் தொழில்நுட்ப இரண்டு நாள் மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் வியாழனன்று தொடங்கியது.
அந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசிய முதல்வர், புதிய முதலீடுகள் காரணமாக மாநிலத்தில் 60,100 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறையில் கடந்த ஓராண்டில் மட்டும்ஏற்றுமதி 10 விழுக்காடு கூடி இருப்பதாகவும் வேலை வாய்ப்புகள் 4 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் சார்பில் மின்னணுச் சாதன தயாரிப்புக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தக் கொள்கை காரணமாக அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் திரு பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிக புதுமைகளைப் படைக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்கள் ஆட்குறைப்புகளில் ஈடுபடாமல் புதுப்புது வேலை வாய்ப்பு வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் எல்லா கிராமங்களுக்கும் கணினி இணையச் சேவையைக் கொண்டு சேர்க்கும் வகையில் ரூ. 1,815 கோடி செலவில் ‘பாரத்நெட்’ என்ற திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றப்போகி றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் கண்ணாடி நுண்ணிழைக் கட்டமைப்பு மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இணைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
கனெக்ட் 2019 மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது. அதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தகவல் தொழில்நுட்ப ஆற்றல்களைப் பற்பல புதுமைகளு டன் வெளிப்படுத்தின.