தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு வந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது உயரத்தை ஒரு சென்டிமீட்டர் அதிகமாகக் காட்டும் முயற்சியாக தலைமுடிக்குள் ‘சூயிங்கம்’ உருண்டையை மறைத்து வைத்த ருசிகர சம்பவம் சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நிகழ்ந்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தயாநிதி என்ற இளைஞரின் உயரத்தை அளவீடு செய்த போலிசார், அவருக்கு தலைமுடி அதிகமாக இருப்பதையும் அதற்குள் ஏதோ ஒரு பொருள் இருப்பதையும் கவனித்தனர்.
சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த இளைஞரின் தலைமுடியைக் கலைத்தனர். தலைமுடிக்குள் சூயிங்கத்தை உருண்டையாக ஒட்டி அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தயாநிதியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
போலிஸ் பணியில் சேர 170 சென்டி மீட்டர் உயரம் தேவையான நிலையில், தயாநிதி 169 சென்டி மீட்டர் இருந்ததால் உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக தலையில் சூயிங்கத்தை ஒட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அவரைத் தகுதிநீக்கம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.