சென்னை: உலகில் பல மொழிகளிலும் பிறக்கும் புதிய சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களை ஒரே மாதத்திற்குள் உருவாக்கும் பெரும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை உள்ளடக்கி அவர்களைச் ‘சொல் உண்டியல்’ என்ற இணையத்தளத்தில் இணைத்து அதன்மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
புதிது புதிதாக உருவாக்கப்படும் தமிழ்ச் சொற்கள் www.sorkuvai.com என்ற இணையத்தளத்தில் இணைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின்’ சார்பில் ‘அகராதியியல் நாள்’ வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அதில் அமைச்சர் இந்த அறிவிப்புகளை விடுத்தார். சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் வழியாக மிக பிரபலமான 9 அகராதிகளில் இருந்து 412,000 தனித்துவம் மிக்க சொற்களை எடுத்து புதிய சொல்லகராதியை உருவாக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது ஆங்கில மொழியின் ‘ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி’யில் உள்ளதைவிட மும்மடங்கு அதிகம் என்ற அமைச்சர், கலைச்சொல் மன்றத்தின் வழியாக 9,000 புதிய சொற்களை உருவாக்கி இருப்பதாகவும் அவை இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுவதாகவும் கூறினார்.
தமிழை வளர்க்கத் தேவைப்படும் முயற்சிகளில் இளையர்களும் மாணவர்களும் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார்.
தமிழின் பரிணாம வளர்ச்சியையும் தமிழர் பாரம்பரியத்தையும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் திட்டம் பள்ளிக்கூடங்களில் இடம்பெறும் என்றார் அவர்.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசுத் துறைகளில் அரசாணைகளைத் தமிழில் வெளியிட முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அந்த நிகழ்ச்சியில் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
வீர–மா–மு–னி–வ–ரின் பிறந்–த–நாள் அக–ரா–தி–யி–யல் நாளா–கக் கொண்டா–டப்–ப–டு–வ–தைச் சுட்–டிய அமைச்–சர் பாண்–டி–ய–ரா–ஜன், தமி–ழில் 10க்கும் மேற்–பட்ட சீர்–தி–ருத்–தங்–க–ளைச் செய்து தமிழை வீர–மா–மு–னி–வர் எளி–மைப்–ப–டுத்–தி–ய–தா–கக் கூறினார்.