சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த மூன்று பயணிகள், அதிகாரிகளிடம் தெரியப்படுத்தாமல் தங்கத்தையும் குங்குமப்பூவையும் மறைத்து எடுத்துவந்து சிக்கினர். கைது செய்யப்பட்டுள்ள அந்த மூவரும் விசாரிக்கப்பட்டுவருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்டவர்களில் இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
துபாயில் இருந்து வந்து ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தரைஇறங்கிய விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதித்தபோது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமீர், 41, ஆரூன், 29, என்ற இரண்டு பயணிகள் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களைத் தனி அறையில் அழைத்துச் சென்று சோதனை செய்தபோது ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள 1.82 கிலோ தங்கக் கட்டிகளை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரையும் கைது செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை வந்த வேறு ஒரு விமானத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது, 22, என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர் ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள 26.5 கிலோ குங்குமப்பூவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. குங்குமப்பூவைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இவரையும் கைது செய்தனர்.
மூவரும் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தங்கம் உள்ளிட்ட பொருட்களைக் கடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாரும் தப்ப முடியாது என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் எச்ச ரித்தனர்.