மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் செயல்பட்டதால் தாம் கடத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தம்மைக் கடத்தியவர்கள் தனி அறையில் அடைத்து வைத்துத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ரயில் நிலையம் சென்ற முகிலன் திடீரென மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியாத நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்மீது பாலியல் தாக்குதல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ள முகிலன் பிப்ரவரி மாதம் தாம் ஒருசிலரால் கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைக் கடத்திய பிறகு தனியறையில் அடைத்து வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
“அவர்கள் சொன்னபடி செய்தால் நான் விரும்பிய எதையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்,” என்று முகிலன் அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
தாங்கள் சொன்னதைக் கேட்டு நடக்காவிட்டால் தம்மைப் பொதுவெளியில் அவமானப்படுத்தப் போவதாக அந்த அடையாளம் தெரியாத சிலர் மிரட்டல் விடுத்தனர் என்றும், தம்மைப் போதையில் வைத்திருக்க போதை ஊசி போட்டதாக அவர்கள் கூறினர் என்றும் முகிலன் தமது மனுவில் மேலும் குறிப்பிட்டிருப்பதாக தமிழக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.