புதுச்சேரி: புதுச்சேரியில் முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கு வெளிநாட்டு மற்றும் வெளிமாநில தொழில் அதிபர்கள் முன்வந்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் ஷாஜகான், சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்திய வர்த்தகர்களைச் சந்தித்து வந்தது பற்றி அவர் தெரிவித்தார்.
புதுவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கரசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்தும் அந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
“புதுவையில் ஐ.டி. பார்க், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
“காரைக்காலில் ரூ.1,500 கோடியில் கண்ணாடித் தொழிற்சாலை, சிறப்பு மருத்துவமனைகள், வணிக வளாகம், கடைத்தொகுதிகள் அமைக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்,” என அவர் கூறினார்.
சுற்றுலாத் திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி, தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு சுமார் 200 கோடி என கிட்டத்தட்ட சுமார் ரூ.3,000 கோடிக்கு வெளிநாட்டு முதலீடு புதுவைக்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் குஜராத் நிறுவனம் ஒன்று, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் வழியாக பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க முன்வந்துள்ளதாகவும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.