சென்னை: தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.
இந்நிலையில், 32ஆக இருந்த தமிழக மாவட்டங்களின் எண் ணிக்கை இப்போது 37ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முன்பே அரசு அறிவித்தது.
அதன்படி புதிதாக இந்த ஐந்து மாவட்டங்களும் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆணையர் களும் சிறப்பு அதிகாரிகளும் மாவட்ட ஆவணங்கள் பிரிப்புப் பணியில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையில் மக்களுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் “5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மக்க ளுக்கான வசதிகளை விரைந்து ஏற்படுத்தித் தரவேண்டும்.
“அதிமுக ஆட்சியில் அறிவிக் கப்பட்ட புதிய மாவட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகளை அரசு தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
“புதிய மாவட்டங்களுக்கான புதிய ஆட்சியர் அலுவலக வளாகம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பிற கட்டமைப்பு வசதிகளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்,” என பதிவிட்டுள்ளார்.