திருச்சி: ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலிஸ்காரர் ஒருவர் இதுவரை 5,000க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளைப் பிடுங்கி, அந்த துவாரங்களில் நல்லெண்ணெய் மஞ்சள் பூசி பத்து போட்டு வருகிறார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் போல் இவர் மரத்தில் ஏதேனும் ஆணி இருந்தால் உடனே அதை சரி செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கிறார்.
ஏட்டு சுபாஷ் சீனிவாசன், 42, போகும் இடம் எல்லாம் மரங்களில் அடித்துள்ள ஆணிகளை பிடுங்கி ‘மஞ்சள் பத்து’ போடும் பணியை செய்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்ட போலிசில் பணியிடை பயிற்சி மையம் செயல் படுகிறது. இதில் சுபாஷ் சீனிவாசன் பயிற்சியாளராக உள்ளார்.
இவர் நேற்று காலை திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மரங்களில் அடித்திருந்த ஆணியை பிடுங்கி அந்த இடத்தில் நல்லெண்ணெய்யுடன் மஞ்சள் தடவிக்கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரைப் பாராட்டினர்.
சுபாஷ் சீனிவாசன் கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யில் போக்குவரத்து போலிசாக பணியாற்றியபோது மரத்தில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றினேன். எனது சேவையை மூத்த போலிஸ் அதிகாரி பாராட்டினார். அந்த ஊக்கத்தால் தொடர்ந்து மரத்தில் ஆணிகளைப் பிடுங்கி வருகிறேன். இதற்காக தனி கருவிகளை வைத்துள்ளேன்.
“எங்கு சென்றாலும் அதை எடுத்துச் சென்றுவிடுவேன். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மரத்தில் ஆணி பிடுங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன்.
“சென்னையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன். திருச்சியில் மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க வந்தேன். ஓய்வு நேரத்தில் ஆணிகளை பிடுங்கி வருகிறேன்.
“ஆணியை பிடுங்கிய இடங்களில் மஞ்சள் நல்லெண்ணெய் கலந்து தடவி காயத்தை ஆற்றி வருகிறேன். இதுவரை 5,000த்துக்கும் மேற்பட்ட மரங்களில் ஆணிகள் பிடுங்கி உள்ளேன். என்னால் மரத்தை நட முடியவில்லை. ஆனால் வளர்ந்த மரத்தை காப்பாற்றி எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல விரும்புகிறேன்,” என்றார் அவர்.