சென்னை: தமிழ்நாட்டில் வீடுகளைக் கட்டி குடியிருப்புப் பேட்டைகளை உருவாக்கி பல வசதிகளையும் ஏற்படுத்த உதவியாக உலக வங்கி ரூ. 5,000 கோடி வழங்கும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார்.
அந்தத் தொகையை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்து இருப்பதாக அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய பிறகு அவர் தெரிவித்தார்.
துணை முதல்வர் கடந்த 7ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட பல நகர்களுக்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு முதலீடு செய்ய முன்வரும்படி தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை சென்னை திரும்பிய துணை முதல்வர், தன்னுடைய பயணம் பற்றி செய்தியாளர்களிடம் பல விவரங்களையும் தெரிவித்தார்.
முதலீடு செய்ய தமிழகத்திற்கு வரும்படி தான் விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் செவிசாய்ப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் வீட்டு வசதி திட்டத்திற்கு உதவும்படி உலக வங்கிக்குத் தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் ரூ. 5,000 கோடி நிதி வழங்க அந்த வங்கி இணங்கி இருப்பதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்தபோது பன்னீர்செல்வம், அங்கு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து 10,000 டாலர் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அமெரிக்காவின் மற்றும் உலக அமைப்புகளின் பேராளர்களையும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தார்.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் பட்டங்களையும் விருதுகளையும் அளித்து துணை முதல்வரைச் சிறப்பித்தனர்.