சென்னை: மும்பையைச் சேர்ந்த 63 வயது மாது ஒருவர், இதய நோய் பாதிப்புக்காக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரது இதயம் தானமாகக் கிடைத்தது. அந்த இதயத்தை ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு வரவழைத்து அந்த மாதுக்குப் பொருத்தி தமிழக மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இப்போது அந்த மாது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாது இதய தசை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமன்றி அப்பெண்ணின் இதய ரத்த நாளங்களும் சரிவர செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த இதயம் போக்குவரத்துப் போலிசாரின் உதவியுடன் வெகுவிரைவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.