நாகப்பட்டினம்: தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த தனது 17 வயது மகளை தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்துள்ளார் ஒரு தாய்.
நாகப்பட்டினம் அருகே நடந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கண்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வந்த ஜனனிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதை விரும்பாத ஜனனியின் பெற்றோர், அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்தனர். இது குறித்த தகவல் அறிந்த இளைஞன் ராஜகுமார், ஜனனியைக் கூட்டிச்சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.
இதையறிந்த ஜனனியின் பெற்றோர் தனது மகளை ராஜ்குமார் கடத்தியதாக காவல்துறையில் மனுக்கொடுத்தனர். அதையடுத்து போலிசார், இரு தரப்பினரையும் அழைத்து அறிவுரை கூறி சமரசம் செய்து ஜனனியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த விவகாரம் தொடர்பாக ஜனனிக்கும் தாய் உமா மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜனனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற அவரது தாய் உமா மகேஸ்வரி, தன் மீதும் தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.