காந்திநகர்: நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குள் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து, மடத்தின் நிர்வாகிகள் 2 பேரைகைது செய்துள்ளனர்.
தன் மகள்களைச் சந்திக்க விடாமல் தடுத்ததாக இளம்பெண்களின் தந்தை புகார் அளித்ததன் அடிப்படையில் அகமதாபாத் ஆசிரமத்தில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “கடந்த 2013ஆம் ஆண்டில் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய மகள்களைச் சேர்த்தோம். ஆனால், அவர்கள் பெங்களூரிலிருந்து அகமதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் அகமதாபாத் ஆசிரமத்துக்குப் போலிசுடன் சென்றோம்.
“ஆனால் அங்குள்ள ஆசிரம ஊழியர்களான பிராணப்பிரியா, பிரியா தத்துவா ஆகியோர் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஒருவழியாக உள்ளே சென்று ஒரு மகளை மீட்டோம். ஆனால் மூத்த மகள்கள் லோகமுத்ரா, மற்றும் நந்திதா, இவருமே வரமறுத்துவிட்டார்கள். அதனால் அவர்களை மீட்டுத்தருமாறு அந்தத் தம்பதி மனுவில் கூறியுள்ளனர். தன் குழந்தைகளைக் கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் நிலையத்திலும் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.ஆச்சாரியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைதாகி உள்ளனர். பிராணப்பிரியா, பிரியா தத்துவா என்ற இவர்கள்தான் எங்கள் மகள்களைப் பார்க்க விடாமலும், ஆசிரமத்துக்குள் நுழைய விடாமலும் கெடுபிடி செய்தவர்கள். ஜனார்த்தன சர்மாவின் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தொடர்ந்து, இவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.