சென்னை: கோயம்பேடு நெற்குன்றம் புவனேஸ்வரி நகர், லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி கட்டட மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். வியாழக்கிழமை இரவு கோபால கிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது அவரது மகன் பாலாஜி குடிபோதையில் தன் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளார்.
மகனின் போக்கை கண்டித்தார் கோபாலகிருஷ்ணன். போதையில் இருந்த மகன் தந்தை என்றும் பாராமால் சரமாரியாக அடித்துச் சாய்த்தார். மயங்கி விழுந்த கோபாலகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது மகன் பாலாஜியை கோயம்பேடு காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.