சென்னை: நேற்று கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்கவேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளது ஆளும் கட்சியான அதிமுக.
கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவோர்களும் 5 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி தேர்தலில் திருத்தம் செய்யப்பட்டது சசிகலாவுக்கு ‘செக்’ வைப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவுடன் இணைவார் என்றும் அவரே அதிமுகவை தலைமையேற்று நடத்துவார் என்றும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால், உட்கட்சித் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்கவேண்டும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் சசிகலா சிறையில் இருந்துவந்தாலும் அவரால் அதிமுகவில் எந்தப் பதவியையும் வகிக்கமுடியாது என்றே கூறப்படுகிறது.