முகத்தைக் கழுவி, தேநீர் அருந்தக் கூறி வாகன ஓட்டிகளை உபசரிக்கும் போலிசார்

முகத்தைக் கழுவி, தேநீர் அருந்தக் கூறி வாகன ஓட்டிகளை உபசரிக்கும் போலிசார்

1 mins read

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இரவு வேளைகளில் வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் தேநீர் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். போலிஸ்காரர்களின் இந்த பொதுநல மனப்பான்மையை அறிந்து பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகின்றன. "நீண்ட தூரம் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் கண் அயர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. "ஓட்டுநர்கள் சுறுசுறுப்பாக கண்விழித்தபடி வாகனத்தை ஓட்டிச் சென்றால்தான் வாகன விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியும். "இதற்காகவே இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி வருகின்றோம். விபத்தை தடுக்கும் விதமாக இந்த விழிப்புணர்வு முயற்சியில் இறங்கியுள்ளோம்," என்று அரியலூர் மாவட்டக் காவல்துறை யினர் கூறியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளுக்கென்றே நாள்தோறும் சுமார் 3,000 லாரிகள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகின்றன. இதுதவிர பேருந்துகள், லாரிகள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், கார், வேன் என நாள்தோறும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அரியலூர் மாவட்டத்தில் பயணம் செய்கின்றன. இதனால் அரியலூர் மாவட்டத் தில் நாள்தோறும் விபத்துகள், உயிரிழப்புகள், கை, கால் சேதம் என பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. காவல் அதிகாரி ஆர். ஸ்ரீனிவாசன் உத்தரவை அடுத்து சிறிது நேரம் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நின்று செல்கின்றன. அப்போது வாகன ஓட்டிகள் சற்று நேரம் ஓய்வு எடுக்கின்றனர். முகம் கழுவி, தேநீர் அருந்தி செல்வதால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்பதும் காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.