குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை - அமைச்சர் ஜெயகுமார்

குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை - அமைச்சர் ஜெயகுமார்

2 mins read

சென்னை: திருச்சியில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை மட்டும் திரித்துப் பரப்பி வருவது கண்ணியமல்ல என்று துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். "இரண்டாகப் பிரிந்த அதிமுக ஒன்றுசேர்ந்ததில் எனக்குப் பெரும்பங்கு உண்டு. "சசிகலாவை முதல்வராக்க பணிகள் நடந்தபோது, என்னிடம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நீங்கள் எல்லாம் ஆண்களா? எதுக்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். "நான் கூறியதால் தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன்மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கி ணைத்தேன்," என்று கூறியிருந்தார் குருமூர்த்தி. இந்த கருத்துகள் அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "குருமூர்த்தி ஆணவத்தின் உச்சத்தில் பேசியிருப்பதாகவும் அவர் நாவை அடக்கவேண்டும்," என்றும் ஆவேசமாகக் கூறியுள்ளார். இந்நிலையில், தனது நிலைப்பாடு குறித்து குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் பேசியபோது அவரைப் பற்றி எதுவும் நான் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில் லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர்தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. "எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்துப் பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓ.பன்னீர்செல்வம் மேல்தான் அதிகம் மரியாதை உள்ளது. கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து," என்று டுவிட் செய்துள்ளார்.