சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்ட மோகனப்பிரியா என்ற மாணவி படித்துக்கொண்டே பகுதி நேரமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
கையும் களவுமாகப் பிடிபட்டதை அடுத்து போலிசாரால் கைது செய்யப்பட்டவர், வழக்கம்போல ஆடம்பரமாக வாழவே திருடியதாக போலிசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
சென்னை மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்கள் மட்டுமின்றி அன்பாகப் பேசி திருடுபவர்களைப் பற்றிய தகவல்களும் ரயில்வே போலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காலையில் கல்லூரிக்குச் செல்லும் மோகனப்பிரியா மாலையில் ரயிலின் கூட்ட நெரிசலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
நளினமாக உடை அணிந்திருக்கும் மோகனப்பிரியா ரயில்பெட்டியின் இருக்கையில் அமர்ந்தபடி நின்றுகொண்டிருக்கும் பெண்களிடம் “உங்களின் கைப்பையைக் கொடுங்கள், எதற்கு சிரமப்படு கிறீர்கள்? நான் பத்திரமாக வைத்துக்கொள்கிறேன்,” என்று அன்பாகக் கேட்டு இந்த திருட்டுகளை அரங்கேற்றியுள்ளார்.
மற்ற ரயில் பயணிகளின் கைப்பையில் இருந்து பணப்பை, கைபேசி ஆகியவற்றை எடுத்ததையும் போலிசார் நேரில் பார்த்து உள்ளனர்.
பயணிகளின் உடைமைகளைத் திருடிய குற்றத்துக்காக மோகனப்பிரியாவைக் கைது செய்த போலிசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity