சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 11.30 மணிக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் டாக்டர் ஆர். பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்த லுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இதற்கிடையே ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பாக கோவையில் நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் ஆர்.பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பேசும்போது, “கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 10,085 வாக்குச்சாவடிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 103 வாக்கு எண்ணிக்கை மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளுக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.