சென்னை: தவறான ஊசி மருந்து செலுத்தியதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லாவரம் அடுத்த தண்டலம் தரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது நித்யா, இருமலால் அவதிப்பட்டார். அவரை அனகாபுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையான ஜெயம் மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றனர் அவரது பெற்றோர். நித்யாவுக்கு மருத்துவச் சோதனை செய்தார் மருத்துவர் சுஜாதா கருணாகரன். பின்னர் ஊசி ஒன்று போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி ஒரு ஊசி மருந்தை நித்யாவுக்குச் செலுத்தினார். ஊசி மருந்து செலுத்திய சில நிமிட நேரத்தில் நித்யா மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக நித்யாவைப் பெரிய மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச்செல்லும்படி நித்யாவின் பெற்றோரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
பதறிப் போன பெற்றோரும் நித்யாவை வேறொரு தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கும் சிகிச்சை அளிக்க மறுத்து, வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறிவிட்டனர்.
பின்னர், பெற்றோரும், நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நித்யாவை சோதித்த மருத்துவர்கள் உயிர் பிரிந்து 30 நிமிடங்களாகி விட்டதாகத் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் நித்யா இறந்துவிட்டார் என அவரது பெற்றோர், குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
ஆனால், இச்சம்பவம் சங்கர் நகர் காவல்துறைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் தனியார் மருத்துவமனையில் நடந்ததால் சங்கர் நகர் ஸ்டேஷனில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர். பின்னர் சங்கர்நகர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். ஆனால் சங்கர்நகர் போலிசாரும் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலிசார், உடல் ஆய்வுகூறுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது.