தமிழகத்தைப் புரட்டிப் போட்ட கனமழை

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட கனமழை

2 mins read
f4e9d229-0d1c-4ad5-a400-fdd6eddac984
தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். படம்: தமிழகத் தகவல்  -

சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது.

இதனால், அணைகள் நிரம்பி வருவதாகவும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து நிலை கள அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் தற்போது வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகளும் அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணை, நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை, கன்னி யாகுமரியில் உள்ள பேச்சிப்பாறை அணை, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்புக் கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திற்பரப்பு, குற்றாலம், அகஸ்தியர், சுருளி உள்ளிட்ட அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இடைவிடாமல் பெய்த மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது.

கடலூரில் மட்டும் 8,000 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை டிசம்பர் 1, 2 ஆகிய இரு தினங்களும் கனமழை பெய்யும் என முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் வகையில் 150 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், 176 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க 50 இடங்களில் குடிநீர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 52 இடங்களில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையே சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகள் தற்போது வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.