மதுரை: பெண்களுக்கென்று மதுரையில் தனி மதுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மதுரையின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இந்த மதுக்கூடம் சகல வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும் மது விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இளம் வயதிலேயே உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பள்ளி மாணவர்கள் கூட மதுப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் பெண்களும் தற்போது மது அருந்தத் துவங்கி உள்ளனர். இதையடுத்து மதுரையில் பெண்களுக்கென்றே தனி மதுக்கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த மதுக்கூடத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எனினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மதுக்கூடத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அந்த மதுக்கூடத்தை மூடவேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கென தனியாக துவக்கப்பட்டுள்ள முதல் மதுக்கூடம் இதுதான் எனக் கூறப்படுகிறது.