தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தலைத் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனது.
உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் வரையறுக்கப்பட்டதில் குளறுபடிகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, குளறுபடிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அதன் பிறகும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தாமதம் ஏற்படுவதாக கூறி இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக மாநில தேர்தல் ஆணையத்தை விசாரித்து தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டனர்.
அப்போது அக்டோபர் 30ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்தது. ஆனால் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
இதற்காகக் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.
இம்மாதம் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
அதன்பின்னர் அவகாசம் வழங்க மறுத்த உச்சநீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் இம்மாதம் 13ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றது.
இதையடுத்து, நேற்று உள்ளாட்சித் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களின் கூட்டத்தைக் கூட்டி மாநிலத் தேர்தல் ஆணையர்
பழனிசாமி கருத்து கேட்டார்.
அப்போது உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
வாக்குச் சீட்டுக்குப் பதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று உள்ளாட்சித் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டார். தமிழகத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இம்மாதம் 27, 30ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 6ஆம் தேதி தொடங்குகிறது.
அதன் கடைசி நாள் இம்மாதம் 13, வேட்பு மனுக்களைத் திரும்ப பெற இம்மாதம் 18ம் தேதி கடைசி நாள் ஆகும்.
அடுத்த மாதம் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட தேதிகள் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். இவற்றுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் தேதிகளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றன.