ராமநாதபுரம்: தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழைப் பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழைப் பதிவாகி உள்ளது.
டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழையால் பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, பெரம்பலூர், சேலம், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, மீமீசல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
306 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கன மழையால், காஞ்சி புரம், செங்கல்பட்டு மற்றும் திரு வள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் 306 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் பெய்த கனமழையால் இல்லத்தார் வடக்கு தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் இருவர் காயமடைந்தனர்.