புதுடெல்லி: தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்க தயார் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து அந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் 8 வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது.
உரிய சட்ட முறைகளைக் கடைப்பிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தலைத் தள்ளிவைத்தால் அதை மொத்தமாகத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் திமுக திட்டவட்டமாகக் குரல் கொடுத்தது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறு வரையறை செய்ய தேவையில்லை என்றது தேர்தல் ஆணையம்.
விசாரணையில் தன் வாதத்தை முன்வைத்த தமிழக அரசு, தேர்தல் நடைமுறை நடப்புக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தேர்தலைத் தள்ளிப்போட முடியாது என்று வாதிட்டது.
நீதிபதிகள், 9 மாவட்டங்களைத் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதித்தனர்.