தமிழ்நாட்டில் இணையத்தளங்களில் ஆபாச படங்களைப் பார்த்தது, பதிவிறக்கம் செய்தது, அனுப்பியது ஆகியவை தொடர்பில் விரைவில் சுமார் 3,000 பேரிடம் விசாரணை நடக்கும் என்று அந்த மாநில போலிஸ் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
அதேவேளையில், இணையத்தில் இருந்து பாலியல் படங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் போலிஸ் கூடுதல் இயக்குநர் ரவி அறிவித்தார்.
இணையத்தில் இருந்து மூன்றே நாட்களில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஆபாசக் காணொளிகள் அகற்றப்பட்டதாகவும் இதர ஏராளமான படங்களும் முகவரிகளும் நீக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை, இந்தியாவின் உள்துறை அமைச்சுக்கு அண்மையில் ஓர் அறிக்கை அனுப்பியது.
சிறார்கள் தொடர்பான ஆபாசகக் காணொளிகளையும் படங்களையும் இணையத்தில் பார்ப்பவர்கள் அதிகமாக உள்ள இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று அந்த அறிக்கை கூறியது.
அறிக்கை கிடைத்ததும் அதை மத்திய உள்துறை அமைச்சு தமிழக போலிசுக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது.
இந்த உத்தரவை அடுத்து தமிழக போலிசார் இணையத்தில் ஆபாசப் படங்களை அகற்றினர்.
அத்தகைய படங்களை யார் யார் பார்க்கிறார்கள், பதிவிறக்கம் செய்கிறார்கள், அனுப்புகிறார்கள் போன்ற பலவற்றையும் அலசி ஆராய்ந்து 3,000 பேரைக் கண்டுபிடித்து பட்டியல் ஒன்றையும் போலிசார் தயாரித்துள்ளனர்.
அந்த 3,000 பேரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று கூடுதல் இயக்குநர் ரவி அறிவித்தார். தமிழ்நாட்டில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள், காணொளிகளைப் பார்ப்பதும் அவற்றைப் பதிந்து வைத்து இருப்பதும் பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.
அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யலாம். மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
தமிழ்நாட்டில் சென்னையில்தான் அதிகமானோர் ஆபாசப் படங்களை இணையத்தில் பார்க்கிறார்கள் என்பது தங்கள் புலன்விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
அத்தகைய படங்களை, காணொளிகளை யார் யார் பார்த்தார்கள், அவை தொடர்பாக சட்டவிரோத செயல்களில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பதை மெய்பிக்க தங்களிடம் மின்னிலக்க ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்த அந்த அதிகாரி, இணையத்தை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தும்படி ஆலோசனை கூறினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity