தமிழ்நாட்டில் போலிஸ் வேலையில் சேர்வதற்குப் போலி சான்றிதழைப் பயன்படுத்தி பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிசார் பலரையும் கைது செய்து விசாரணையை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். கபடி பயிற்றுவிப்பாளரான சீமான் என்பவர் இந்த மோசடியின் காரணகர்த்தா என்று கூறப்படுகிறது.
சில திரைப்படங்களில் நடித்திருக்கும் சீமான், இப்போது போலிஸ் பிடியில் இருக்கிறார். இந்த மோசடி பேர்வழி, தமிழகம் முழுவதும் போலிஸ், ராணுவம், துணை ராணுவம் போன்ற வேலைகளில் சேர்வதற்குப் போலி சான்றிதழ்களைப் பலருக்கும் வழங்கி இருக்கலாம் என்று போலிசார் சந்தேகப்படுகிறார்கள்.
சீமான், 55, போலிஸ்காரராக தன்னைச் சித்தரிக்கும் ஒரு படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அதை வைத்து இளைஞர்களை ஏமாற்றி இருப்பதாக நம்பப்படுகிறது.
சீமானின் வலையில் விழுந்தவர்கள் ரூ. 30,000 வரை கொடுத்து போலி விளையாட்டுச் சான்றிதழ்களை வாங்கி அதைத் தாக்கல் செய்து வேலையில் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வரும் மணிராஜன், 23, என்பவரும் தரகராகச் செயல்பட்ட ராஜீவ்காந்தி, 30, என்பவரும் முதலில் கைது செய்யப்பட்டார்கள்.
அதைத் தொடர்ந்து ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஆறு பேர் போலி விளையாட்டுச் சான்றிதழ் கொடுத்து தகுதித் தேர்வில் கலந்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலிஸ் வேலைக்குத் தேர்வாகி இருக்கும் முத்துமணி, 23, ராஜசேகரன், 25, என்ற இருவரும் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். தவமுருகன், 22, என்பவரையும் போலிஸ் கைது செய்தது. இவர் ரூ. 17,000 கொடுத்து போலி சான்றிதழ் வாங்கி இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை பணிக்குத் தேர்வாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
போலி சான்றிதழ் மூலம் வேலைக்குத் தேர்வாகி உள்ள மேலும் மூவரை போலிஸ் தேடுகிறது. இந்த மோசடியில் தமிழகம் முழுவதும் இன்னும் பலர் சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆகையால் விசாரணையைத் தீவிரப்படுத்தி இருப்பதாக அவர்கள் கூறினர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity