சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் ஒன்பது மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் இம்மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று ஐயம் கிளம்பி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஆளும் கட்சி, பல உத்திகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியைச் சாதிக்கலாம் என்று நம்புகிறது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால்தான் மத்திய அரசிடம் இருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய சுமார் ரூ. 6,000 கோடி நிதி கிடைக்கும் என்றும் அதை வைத்துக்கொண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தலை சமாளித்துவிடலாம் என்றும் அதிமுக கணக்குப் போடுகிறது.
அதேவேளையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக, உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நீதிமன்றத்தை நாடும் என்று தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் இம்மாதம் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல் மாநிலத் தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகவும் ஆகையால் திமுக மீண்டும் வழக்குத் தொடுக்கப்போவதாகவும் அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை நடக்க வேண்டும். பட்டியலினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இடம்பெற வேண்டும். அதன் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக கோருகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார், “திமுக தலைவர் ஸ்டாலின் மகிழ்ச்சி அடைவதுபோல் நடிக்கிறார். ஆனால் தேர்தலைச் சந்திக்க அவர் தயாராக இல்லை. அவர் அழுதுகொண்டே சிரிக்கும் நிலையில் இருக்கிறார்,” என்றார்.
இவ்வேளையில், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.
ரஜினிகாந்தின் பெயரை, புகைப் படத்தை, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயர், கொடியைப் பயன்படுத்தி னால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் எச்சரித்தது.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அதன் தலைவர் கமல்ஹாசனும் அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நேற்று அறிவித்தனர்.