திருச்சி: மத்திய அரசு போண்டியாகும் நிலையில் இருக்கிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அபாயச் சங்கு ஊதி இருக்கிறார்.
பணம் இல்லாததால் ஏழை, எளிய மக்களுக்கு ஆட்சியாளர்கள் எதையுமே செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் திருச்சியில் அவர் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து சிவகங்கை சென்ற ப. சிதம்பரம், நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
பொருளியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக மத்திய அரசாங்கம் ஜிஎஸ்டி வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லி திஹார் சிறையில் 106 நாட்கள் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்து இருக்கும் சிதம்பரம், முன்பைவிட கடுமையாக மத்திய அரசைக் குறைகூறி வருகிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் கூலித் தொழிலாளிக்கு மாதம் 23 நாட்கள் வேலை கிடைத்ததாகவும் ஆனால் அந்நடவடிக்கைக்குப் பிறகு 15 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை கிடைப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
இந்திய ரயில்வே துறையைத் தனியார்மயமாக்க நெடுங்காலம் ஆகும் என்றும் அது வரை பாஜக ஆட்சியில் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.