சேலம்: உள்ளூர் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் சேலத்திற்கு வந்து நடுசாலையில் இரவு நேரத்தில் வடமாநில இளைஞரைத் துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலிசை தமிழக போலிஸ் மடக்கியது.
சேலம் பால்மார்க்கெட் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த வர்த்தக மளிகைக் கடையை நடத்தி வருகிறார்.
சேலம் செரி ரோடு பகுதியில் சனிக்கிழமை இரவில் அவர் நின்றுகொண்டு இருந்தபோது, காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச்சென்றனர்.
அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப் படை காவல் உதவி ஆய்வாளர் ரவி என்பவர் அளித்த தகவலின் பேரில் அந்தக் காரை தமிழ்நாட்டின் கருப்பூர் போலிஸ் தடுத்து மடக்கியது.
விசாரணையில் தாங்கள் பெங்களூர் போலிசார் என்றும், அங்கு திருட்டுப்போன ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா புகையிலைப் பொருட்களை வாங்கியது தொடர்பில், ஹரிஷை கைது செய்து அழைத்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பலவற்றையும் விசாரித்த கருப்பூர் போலிஸ் கடைசியில் புகார் நகலை பெற்றுக்கொண்டு ஹரிஷை அழைத்துச்செல்ல அனுமதித்தது.