தேனி: எலி, காட்டுப்பன்றிகள் துளையிட்டதாலேயே 58 கிராம பாசனக் கால்வாய் கரைகள் உடைந்துவிட்டதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்த தைக் கேட்டு விவசாயிகளும் அதிகாரிகளும் சிரித்துக்கொண்டே சென்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள, 70 அடி உயரம் கொண்ட வைகை அணை நீரை 58 கிராமங்களைச் சேர்ந்த கண்மாய் மற்றும் நீர் நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்காக, ‘58 கிராம பாசனக் கால்வாய்த் திட்டம்’ என்ற ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அதன்படி 33 கி.மீ. நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டது.
இது உசிலம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களுக்கு நன்மை பயக்கிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5ஆம் தேதி இந்தக் கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் 24 மணிக்குள் கால்வாய்க் கரை உடைந்து தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்து பல ஏக்கர் பருத்தி சாகுபடி சேதமடைந்தது. இதைப் பார்வையிட வந்த அமைச்சர், கரை உடைந்ததற்கு எலிகளும் காட்டுப் பன்றிகளும்தான் காரணம் என்றார்.
இதைக் கேட்ட அதிகாரிகளும் விவசாயிகளும் சிரித்தனர். தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜுவைப் போல் இவரும் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி பலரும் கிண்டலடித்தனர்.